என் 'வீல்சேர்' இனி மக்களுக்காக சுற்றும்!
பார்வை குறைபாடு, பெருமூளை வாதம், உடல் இயக்க சிக்கல்கள் என, பல்வேறு பிரச்னை களையும் தாண்டி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், முதல் முயற்சி யிலேயே, 942வது இடத்தை பிடித்து சாதித்திருக்கும், கோவையைச் சேர்ந்த அப்துல்லா அப்ரித்: என் தாய் கருவுற்ற ஆறாவது மாதத்திலேயே நான் பிறந்ததால், என்னை பிழைக்க வைக்க பெரும்பாடு பட்டதாக அப்பா கூறுவார்.
நான் பிறந்ததில் இருந்து, இப்போது வரை என் உலகம் தடைபடாமல் இயங்கு கிறது என்றால், அதற்கு அப்பா தான் காரணம். அப்பா, நகைக் கடையில் கூலி வேலை பார்த்தார்.
பள்ளியில் படிக்கும் போது, மற்ற குழந்தைகள் மாதிரி என்னால் இயங்க முடியவில்லை என்ற வருத்தம் நிறையவே இருந்தது. அந்த வெறுமையை படிப்பில் காட்டி, நன்கு படித்து, பள்ளி தேர்வுகளில் முதல் மாணவனாக வந்தேன்.
பள்ளியில் நடந்த ஒரு விழாவுக்கு, சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வந்திருந்தார். அவரது பேச்சு உத்வேகத்தை அளித்தது.
அவரிடம், 'ராணுவத்தில் சேர என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பணி ஒன்றும் ஒதுக்கப்பட வில்லை. ஆனால், அதற்கு இணையாக, ஐ.ஏ.எஸ்., படித்து, கலெக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்யலாம்' என்று கூறினார்.
அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரியில் தான் படித்தேன். என்னை கல்லுாரிக்கு அழைத்து செல்வதும், அழைத்து வருவதுமே பெரிய வேலையாக இருந்ததால், அப்பாவால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால், அவரது வருமானம் பாதிக்கப்பட்டது.
எல்லாரும் அப்பாவை திட்டுவர். 'பையன் பின்னாடியே ஏன் அலையுற... அவன் ஐ.ஏ.எஸ்., ஆக மாட்டான். பெட்டிக்கடை வைத்து கொடு; பிழைத்துக் கொள்வான்' என்று என் முன்னாடியே கூறுவர். ஆனால், நான் கலெக்டர் ஆகணும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார்.
கல்லுாரி படிப்பு முடித்ததும், சமூக வலைதளம் வாயிலாக , மத்திய அரசு பணி யாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு படிக்க ஆரம்பித்தேன்.
தமிழ் வழியில் படித்து , உதவியாளர் வைத்து தான் தேர்வு எழுதினேன். தமிழ் வழியில் நேர்முகத்தேர்வில் பங்கேற்றேன். முதல் முயற்சியிலேயே வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கேன்.
தற்போதும், என் உழைப்பை அங்கீகரிக்க, இன்னும் கூட சிலருக்கு தயக்கம் இருக்கும்; ஆனால், அது குறித்து எல்லாம் நான் கவலைப்படவில்லை.
விமர்சனங்கள் மட்டுமில்லை... வேறு எதுவுமே என்னை முடக்காது.
இந்த இடத்துக்கு நான் வர, பலரும் உதவி செய்துள்ளனர் . அதை நான் திரும்பிக் கொடுக்க வேண்டிய நேரம் இது. என், 'வீல்சேர்' இனி மக்களுக்காக சுற்றும்!