வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, அழுக்கு சாமியார் கோவிலில், வேட்பாளர் பட்டியலை வைத்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு செய்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, வேட்டைக்காரன்புதுாரில் உள்ள அழுக்கு சாமியார் கோவிலுக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்றார்.

பின், கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், ரங்கசாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி சார்பாக போட்டியிடும், தனது என்.ஆர்.காங்., வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பெயர்களை, காகிதத்தில் எழுதி, அழுக்கு சாமியார் படத்தின் முன்பு வைத்து வழிபட்டார்.

கோவிலில் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தபின், அங்கிருந்து புறப்பட்டார். அப்போது, ''எங்கள் கூட்டணிக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது,'' என்றார்.

த.வெ.க., தலைவர் விஜய் பற்றிய கேள்விகளுக்கு, பதிலளிக்காமல், மவுனமாக சென்றார்.

இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கும் சென்று முதல்வர் ரங்கசாமி வழிபட்டார்.

Advertisement