தவெக ஆட்சி அமையும்; கோட்டையில் விஜய் கொடியேற்றுவார்: செங்கோட்டையன் நம்பிக்கை

2

ஈரோடு: ''தவெக ஆட்சி அமையும்; கோட்டையில் விஜய் கொடியேற்றுவார்'' என முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப் பாளருமான செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ஊர்வலமாக சென்று செங்கோட்டையன் வேட்பு மனு தாக்கல் செய்தார். பிறகு நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: 234 தொகுதியிலும், வேட்பாளர்களையும் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.


கோபிச்செட்டி பாளையம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. நான் 9 முறை வெற்றி பெற்று இருக்கிறேன். மக்கள் எனக்கு அளித்த கொடையாக கருதுகிறேன். இந்த தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் கனவு




தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், நாளை தமிழகத்தை ஆள போகிற, எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை நாயகனாக தமிழகத்தில் நல்லாட்சி தர வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். மக்கள் விரும்பக்கூடிய தலைவராக விஜய் இன்று அனைத்து வேட்பாளர்களையும் அனுப்பி இருக்கிறார்.


குறிப்பாக, தமிழகத்தில் புதிய இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் மக்களுடைய கனவாக இருக்கிறது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையில், தனக்கு இருக்கும் அனைத்து வசதிகளை விட்டுவிட்டு, திரையுலகத்தில் உச்சக்கட்டத்தில் இருப்பதை தேவையில்லை.

ஆட்சி உறுதி




மக்களுக்கு பணியாற்றுவேன் என்று சொல்லி, பணிபுரிய விஜய் வந்துள்ளார். அவரது காலம் பொற்காலமாக அமையும். ஆகவே அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே மாற்றம் உருவாகும். வெற்றி என்பது, அவருடைய தலைமையில் உருவாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்கள் என்றும் என்னை நேசிப்பார்கள்; மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு. மக்கள் சக்தி ஒன்று திரண்டு இருக்கிறது . தவெக ஆட்சி உறுதியாக அமையும். கோட்டையில் 2026ல் விஜய் தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Advertisement