சென்னை நெடுஞ்சாலையில் தி.மு.க., நிர்வாகி மறியல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க., மாநில தீர்மானக்குழு உறுப்பினருக்கு சீட் வழங்காததை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தி.மு.க., மாநில தீர்மானக்குழு உறுப்பினராக சிவா உள்ளார். இவருக்கு செஞ்சி அல்லது மயிலம் தொகுதியில் போட்டியிட தலைமை வாய்ப்பு வழங்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்பியிருந்தனர்.

இந்நிலையில் மயிலம் தொகுதி தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கிய நிலையில், செஞ்சியில் வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ., மஸ்தான் அறிவிக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவாவின் ஆதரவாளர்களான மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை தலைமையில் ஒரு சிலர், நேற்று காலை 9:10 மணிக்கு விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் செஞ்சி தொகுதியில் சிவாவிற்கு சீட் வழங்க கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 9.30 மணி வரை நடந்த இந்த மறியலால், சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.

Advertisement