'நீங்களும் டாக்டர் ஆகலாம்' 19ல் வழிகாட்டுகிறது 'தினமலர்'

சென்னை:மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில், 'நீட்' தேர்வு குறித்த கருத்தரங்கம் மற்றும் மாதிரித் தேர்வுகள், 'தினமலர்' நாளிதழ் சார்பில் வரும் 19ல் நடத்தப்பட உள்ளன.

பிளஸ் 2 முடித்த பெரும்பாலான மாணவர்களின் உயரிய கனவுகளில் ஒன்று, மருத்துவம் படிப்பது.

அதற்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து,'நீட்' மாதிரி தேர்வையும், அது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கையும் நடத்துகின்றன.

இந்த நிகழ்ச்சி வரும் 19ம் தேதி காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரை, சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகள், பாடங்களை புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை, நிபுணர்கள் வழங்குவர்.

அதேபோல், ஒவ்வொரு மருத்துவ படிப்புக்கும், தேவையான தகுதிகள், மதிப்பெண்களின் அடிப்படையிலான வாய்ப்புகள், சிறந்த மருத்துவ கல்லுாரிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் நடத்தப்படும், 'நீட்' மாதிரி தேர்வில், தேசிய அளவிலான வினாக்கள் இடம்பெறும். இதனால், மாணவர்கள் தங்களின் திறனை அறிவதோடு, நுண்ணறிவையும் பெற முடியும்.

வேதாந்து லேர்னிங் சென்டர் இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தரும் வகையில், மாதிரித் தேர்வில், முதல் ஐந்து இடங்களை பெறும் மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்க வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.

Advertisement