புதுச்சேரியில் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு :இறுதி நாளிலும் குவிந்த மாணவர்கள், பெற்றோர்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்வித் திருவிழாவாக நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் உயர் கல்விக்கான 2 நாட்கள் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரி சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் ஏப்ரல் 4 ஆம் தேதி துவங்கியது.

இரண்டாம் நாளிலும் வழிகாட்டி நிகழ்ச்சி களை கட்டியது. சிறப்பு அம்சமாக காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை கருத்தரங்கம் நடந்தது. நீங்களும் விஞ்ஞானி ஆவது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் டி.ஆர்.டி.ஓ., (டிபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனிசேஷன்) டில்லிபாபு; தொழில் துறைக்கு தயாராக இருங்கள் தலைப்பில் கல்வி ஆலோசகர் மீனாட்சிசுந்தரம்; நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின்; மதிப்பெண்ணும் திறன்களும் தலைப்பில் சோகோ கார்ப்பரேஷன் இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி ஆகியோர் பேசினர்.

இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கான பெற்றோர், தங்கள் பிள்ளைகளுடன் காலையிலே வருகை தந்தனர். என்னென்ன படிப்புகளை, எந்தெந்த கல்லுாரிகளில் படிக்கலாம் என, ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

கல்வி ஆலோசகர்கள் கூறிய உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்துகளை மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

வழிகாட்டி நிகழ்ச்சியில் முன்னணி கல்வி நிறுவனங்களின் 80 ஸ்டால்கள், இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு கல்லுாரியிலும், என்னென்ன படிப்புகள் இருக்கின்றன, அங்குள்ள வசதிகள் விபரம், படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் குறித்த விபரம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், ஒரே இடத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், அங்கிருந்த கல்வி நிறுவன பிரதிநிதிகளிடம், கல்லுாரிகளின் பாடப்பிரிவுகள், சேர்க்கை முறை, கல்விக் கட்டணம் குறித்து கேட்டறிந்தனர்.

மாணவர்களுக்கு பரிசு இரு நாட்களும் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பொது அறிவு போட்டி நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, லேப்டாப், டேப்லெட் மற்றும் வாட்சுகள் பரிசாக வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் 21 மாணவ, மாணவியர் பரிசு வென்றனர்.

தொடர்ந்து வழிகாட்டி நிகழ்ச்சி, இரவு 7:00 மணியுடன் நிறைவு பெற்றது. 2 நாட்களும் உயர்கல்வி குறித்த ஆலோசனை பெற்ற மாணவர்களும், பெற்றோரும், உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்த குழப்பம் தீர்ந்து, தெளிவு பெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியை நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ருசி பால் நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்கின.

நன்றி நன்றி நன்றி கடந்த 2 நாட்களும், 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து மாணவர்களுக்கு ஆலோசனை அளித்த, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், கருத்தரங்கில் பங்கேற்ற துறை சார்ந்த வல்லுநர்களுக்கும் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நன்றிகள்.


வழிகாட்டி மாணவர்கள், பெற்றோர்கள் பேட்டி…

குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது எந்த பாடம் எடுத்து உயர்கல்வி படிப்பது என்பதில் குழப்பம் இருந்தது. 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என தெளிவாக எடுத்துக் கூறினர். வேலை வாய்ப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினர். இதனால், உயர்கல்வியில் எந்த பாடப்பிரிவை எடுத்தால் வேலை வாய்ப்பு உள்ளது என தெளிவாக கூறியதால், என் குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது.

-காவியா,

திருவந்திபுரம், கடலுார்.

குழப்பமாக வந்தேன்; தெளிவாக செல்கிறேன் வழிகாட்டிக்கு வரும்போது, ஒருவித குழப்பத்தோடு வந்தேன். பல்வேறு துறை வல்லுநர்கள், பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினர். மாணவர்களின் எதிர்காலம் குறித்து விளக்கமாக கூறினர். ஏராளமான சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறினர். என் குழப்பம் தீர்ந்து, தெளிவான மனநிலை ஏற்பட்டுள்ளது.

-தனுஷா,

அரியாங்குப்பம்.

'தினமலர்' நாளிதழுக்கு நன்றி இரண்டு நாட்களும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். எந்த துறையில் சேர்ந்து படித்தால் என்ன பயன் என்பது குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினர். மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சிறப்பான முறையில் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.

-கீர்த்திகா,கரிக்கலாம்பாக்கம்.

சிறந்த வழிகாட்டி நிகழ்ச்சி சிறந்த கல்லுாரிகளை எப்படி தேர்வு செய்வது என்றும், அங்கு படித்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் எனவும் ஆலோசனை வழங்கினர். கல்லுாரிகளைத் தேர்வு செய்யும் முறை, 'கட் ஆப்' முறை குறித்தும் விளக்கினர். உயர்கல்விக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நிகழ்ச்சி இருந்தது.

-யுவராஜ், தட்டாஞ்சாவடி

பெற்றோர் பேட்டி…

பயனுள்ளதாக இருந்தது என் மகளின் மேற்படிப்பு தொடர்பாக குழப்பம் இருந்தது. எந்த கல்லுாரியை தேர்ந்தெடுப்பது மற்றும் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் இருந்தது. அதற்கான தீர்வு இந்த வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் எனக்கு கிடைத்துள்ளது. ஏராளமான கல்லுாரிகளின் ஸ்டால்கள் இங்கு இடம்பெற்றிருந்தது பயனுள்ளதாக இருந்தது.

-சுரேஷ், கூத்தப்பாக்கம், கடலுார்.

தெளிவான நிலை ஏற்பட்டுள்ளது 'தினமலர்' வழிகாட்டியில் நிறைய விஷயங்கள் குறித்து பேசினர். பாடப் பிரிவுகளை தேர்வு செய்வது மட்டுமின்றி, கல்லுாரிகளை எப்படி தேர்வு செய்வது எனவும் கூறினர். மிகவும் பயனுள்ள தகவல்களை, கூறினர். ஒரு மாணவருக்கு தேவையான அடிப்படை அறிவுகள் குறித்து தெளிவாக எடுத்துக்கூறினர். ஒரு தெளிவான நிலைக்கு வந்து விட்டோம்.

-ஜலஜா ராணி, அரும்பார்த்தபுரம்.

உயர்கல்விக்கு பயனுள்ள வழிகாட்டி இரண்டு நாட்களாக 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் என் மகளுடன் பங்கேற்றேன். தரமான கல்லுாரிகளைத் தேர்வு செய்ய ஆலோசனை வழங்கினர். 'கட் ஆப்' தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். என் மகளின் உயர்கல்விக்கு இந்த வழிகாட்டி பயனுள்ளதாக இருந்தது.

-வீரப்பன், நல்லுார், மதகடிப்பட்டு.

தெளிவான ஆலோசனை என் குழந்தையின் எதிர்கால கல்வி தொடர்பாக என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அது தொடர்பாக எனக்கு பல்வேறு சிந்தனைகள் இருந்தது. இங்கு பல்துறை வல்லுநர்கள் மூலம் உயர்கல்வி ஆலோசனை வழங்கினர். இதனால், எனக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது. தினமலர் நாளிதழுக்கு நன்றி.

-ராணி,குறிஞ்சிப்பாடி, கடலுார்.

Advertisement