மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தகவமைத்து கொள்ள வேண்டும் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் பேச்சு

சென்னை: ''மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, மாணவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

சென்னை அடுத்த கவுரிவாக்கம் பகுதியில் இயங்கும், நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் 14ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.

நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் லோகநாதன் தலைமையில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர், மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

பின், அவர் பேசியதாவது:

மாணவர்கள் பட்டம் பெறுவதுடன் நின்று விடாமல், வாழ்க்கையில் தொடர்ந்து கற்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில், தொடர்ந்து முன்னேற வேண்டுமானால், அத்துறை யில் நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழியாக கல்வியை பார்க்காமல், தொடர்ந்து படித்து, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, உங்களை நீங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement