*தீவுகளுக்கு அரணாக விளங்கும் பவளப்பாறைகள் *கடல் வாழ் உயிரினங்களின் உயிரோவியமாக உள்ளது

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் இயற்கை அளித்த கொடைகளில் ஒன்றாகவும், தீவுகளின் அரணாகவும், கடல் வாழ் உயிரினங்களின் உயிரோவியமாக திகழ்வதால் பவளப்பாறைகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

மன்னார் வளைகுடா இந்தியாவிலேயே பவளப்பாறைகள் நிறைந்த பகுதியாக திகழ்கிறது. இங்கு 104 வகையான கடின பவளப்பாறைகள் உள்ளன. இந்த பவளப்பாறைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு இருப்பிடமாகவும், உணவு தேடும் இடமாகவும் உள்ளன. மன்னார் குளைகுடாவில் உள்ள 21 தீவுகளை சுற்றிலும் பவளப்பாறைகள் அதிகமாக உள்ளன. கடல் வாழ் உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிக முக்கிய பங்காற்றுகிறது.

மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை உயிரினங்களின் புகலிடமாக உள்ளது. தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கடற்கரை மண்ணரிப்பை தடுக்கவும் உதவுகிறது. காலநிலை மாற்றம், மாசுபடுதல் அதிகரிப்பு, மீன் பிடித்தல் மற்றும் கடலில் கழிவு நீர் கலத்தல் போன்றவற்றால் பவளப்பாறைகள் வெகுவாக பாதிப்பை சந்திக்கிறது. இவற்றை மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றன. செயற்கை பவளைப்பாறைகளை அமைத்து அதற்குள் பவளங்களை வளர்த்து கடலுக்குள் வைக்கப்படுகிறது.

முன்பு பவளப்பாறைகள் சுண்ணாம்புக்காகவும் அலங்கார பொருட்களுக்காகவும் வெட்டி எடுக்கப்பட்டன. முந்தைய காலங்களில் சிமென்ட் மற்றும் சுண்ணாம்பு தயாரித்தலுக்கும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது. இந்தியாவில் பவளப்பாறைகளை வெட்டி எடுப்பதற்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்கு முறை மண்டல அறிவிப்பு 1991 மூலமாகவும் பவளப்பாறைகளை அழிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் பெருவாரியான பவளப்பாறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. கடல் அட்டை, கடல் ஆமை, கடல் பசு போன்ற அரிய வகை உயிரினங்களுக்கு புகலிடமாக திகழ்கிறது. இவற்றின் அருகே கடல் புற்கள் அதிகளவு வளர்வதால் கடல் பசுக்கள் வளர்ச்சிக்கு இன்றியமையாதாக உள்ளன. கீழக்கரை வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா கடலில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும். ரசாயன பொருட்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பெருவாரியான பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டும். கடல் மற்றும் கடலோரப் பகுதிகளின் துாய்மையே மீன்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக விளங்குகின்றன.

பவளப்பாறைகளை பாதுகாப்பது குறித்து மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு கருத்துக்களை ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.

Advertisement