பசு மரியாதை பிரசார துண்டு பிரசுரம்: உதாசின் பாவாஜி மடத்தில் வெளியீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில், மடாதிபதி சுவாமி கர்ஷினி அனுபவானந்த் மகராஜ், பசு மரியாதை பிரசார இயக்க துண்டு பிரசுரத்தை நேற்று வெளியிட, விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம் பெற்றுக் கொண்டார்.

அதை தொடர்ந்து மடாதிபதி சுவாமி கர்ஷினி அனுபவானந்த் மகராஜ் பேசியதாவது:

பசும்பால் குடிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அத்தகைய பசுக்களை தெய்வமாக மதிக்க வேண்டும். பசுக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. மத்திய, மாநில அரசுகள் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். பசு சேவைக்கான மத்திய அரசின் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பசுவை பாதுகாப்பது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பசு மரியாதை அழைப்பு பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது. இப்பிரசார இயக்கமானது கிராமங்கள் தோறும் சென்று மக்களிடம் பசுவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விளக்கமளித்து கையொப்பம் பெற்று வரவுள்ளது.

கையொப்பங்கள் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை பெற்று அப்படிவங்களை காஞ்சிபுரம் வட்டாட்சியரிடம் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மடத்தின் மேலாளர் சுகாசின் ஹூமுனி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement