இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு

தாவணகெரே: இடைத்தேர்தல் நடக்கும் தாவணகெரே தெற்கு, பாகல்கோட் தொகுதிகளில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மேட்டி, சாமனுார் சிவசங்கரப்பா மறைவால் காலியான, பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கிறது. இரு தொகுதிகளிலும் இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் சீட் வழங்கியது. பாகல்கோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ., வீரண்ணா சரந்திமத்துக்கும், தாவணகெரே தெற்கில், கட்சி தொண்டர் சீனிவாஸ் தாஸ் கரியப்பாவுக்கும், பா.ஜ., சீட் கொடுத்தது.

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தீவிர பிரசாரம் செய்கின்றனர். பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் கொளுத்தும் வெயிலிலும் பிரசாரம் செய்தனர். இரு கட்சிகளின் தலைவர்களும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று மாலையுடன் இரு தொகுதிகளிலும் பிரசாரம் நிறைவு பெறுகிறது. அதற்கு பின், வெளிமாவட்ட தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். வீடு, வீடாக சென்று வேட்பாளர்கள் நாளை தங்களுக்கு ஓட்டு சேகரிக்க உள்ளனர்.

பாகல்கோட் தொகுதியில் 1,26,761 ஆண்கள், 1,32,476 பெண்கள், 23 திருநங்கையர் என 2,59,260 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,188 பேர் முதல் முறை ஓட்டு போடுபவர்கள். தாவணகெரே தெற்கில் 1,13,654 ஆண்கள், 1,17,986 பெண்கள், 43 திருநங்கையர் என 2,31,683 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2,774 பேர் முதல்முறை தங்கள் ஓட்டை பதிவு செய்ய உள்ளனர்.

Advertisement