இணைப்பு சாலையில் ஓட்டுநர்கள் அடாவடி: வாகன ஓட்டிகள் அவதி

திருமழிசை: சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை இணைப்பு சாலை, வாகனம் நிறுத்தமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள், சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், திருமழிசை பகுதி மக்கள் செல்லும் வகையில் இருவழிப்பாதை இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை திருமழிசை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த, இணைப்பு சாலையில், தொழிற்சாலைகளுக்கு வரும் கனரக வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தப்படுகின்றன.

இதனால் இருவழிச்சாலை ஒருவழி சாலையாக மாறியதுடன், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் கோர விபத்துக்களால் உயிரிழப்பு சேதங்களும் ஏற்படுகிறது.

அவ்வப்போது ரோந்து வரும் போக்குவரத்து போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என வாகன ஓட்டிகள் குற்றறம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக குத்தம்பாக்கம், பாப்பன்சத்திரம், செட்டிப்பேடு, தண்டலம், இருங்காட்டுகோட்டை ஆகிய பகுதிகளில் இணைப்புச் சாலையில் பார்க்கிங் ஏரியாவாக மாறியுள்ளது.

எனவே இணைப்பு சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை, அப்புறப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Advertisement