கல்யாண விருந்துக்கு அழைத்த த.வெ.க., சின்ன தோசையை கொடுத்த தி.மு.க., : காங்., பிரவீன் ஒப்பீட்டால் மீண்டும் சர்ச்சை

2

சென்னை: ''தமிழகத்தில் ஒரு பக்கம் சின்ன தோசையை கொடுத்து, பகிர்ந்து சாப்பிடச் சொன்னார்கள்; மற்றொரு பக்கம் கல்யாண விருந்து கொடுத்தனர். ''ஆனால், எங்களின் பலம் தெரியாமல், சின்ன தோசையை ஏற்றுக் கொண்டோம்,'' என, ராகுல் நண்பரும், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில், விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதில், காங்கிரசைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி., உள்ளிட்டோர் ஆர்வமாக இருந்தனர். ஆனால், தி.மு.க., கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்கிறது. தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பு மனு தாக்கலும் நிறைவடைந்த நிலையில், மீண்டும் த.வெ.க., கூட்டணியை பிரவீன் சக்கரவர்த்தி நினைவூட்டி சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: புதுச்சேரி, கேரளாவில் வரும் 9ம் தேதி தேர்தல் என்பதால் ராகுல், பிரியங்கா ஆகியோர் அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின், தமிழகத்துக்கு பிரசாரத்திற்கு வருவர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருப்பது உண்மை.

யாருக்கு 'சீட்' கொடுத்தனர்; யாருக்கு கொடுக்கவில்லை என்பது பிரச்னை இல்லை. ஆனால், 28 சீட் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்குவதால், கடந்த 20 ஆண்டுகளாகவே இந்நிலை இருக்கிறது. அப்போது பிரச்னை செய்தவர்களே, இப்போதும் செய்கின்றனர். காங்கிரசுக்கு மரியாதை கிடைக்காததால், கொந்தளிப்பும் அதிருப்தியும் இருக்கிறது.

தமிழகத்தில் பா.ஜ., மற்றும் காங்கிரசை ஒப்பிட்டு பாருங்கள். இங்கு, ஆட்சியில் இருந்திருக்கிறோம், இன்னமும் காமராஜர் ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இங்கு, காங்கிரசின் மதிப்பு மிக அதிகம். நாங்கள் அனுமார் மாதிரி; எங்களின் பலம் எங்களுக்கே தெரியவில்லை.

தி.மு.க., கூட்டணியில் கூடுதல் இடங்களை பெற முயற்சித்தோம். ஒரு பக்கம், சின்ன தோசையை கொடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கள் என்றனர்; மற்றொரு பக்கம், கல்யாண விருந்து வைத்து, அழைப்பு விடுத்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சி தலைமை, பல்வேறு காரணங்களால் 28 இடங்களுக்கு ஒப்புக் கொண்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement