ஜோதிடத்தை மீறி தி.மு.க., ஆட்சிக்கு வரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

27

சென்னை: ''தி.மு.க., இரண்டாவது முறையாக இதுவரை ஆட்சிக்கு வந்ததில்லை என ஜோதிடம் சொல்கிறது. அதையெல்லாம் மீறி, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அவர் அளித்துள்ள பேட்டி: தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து வாதாடி, போராடி பெற்றுத் தர தி.மு.க.,வால் மட்டுமே முடியும். பா.ஜ.,வின் அடிமையாக அ.தி.மு.க., உள்ளது. இவர்கள் தமிழகத்தின் உரிமைகளை பெறாமல், பணிந்து போவர்.

எனவே, தமிழகத்தை தி.மு.க., தான் ஆள வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். அதனால் தான் தமிழகத்திற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே போட்டி என நாங்கள் சொல்கிறோம்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி, பிற சலுகைகள், நாம் ஜி.எஸ்.டி.,யாக கொடுக்கும் வரிகளை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றுகிறது. அதையும் மீறி, தி.மு.க., அரசு பல திட்டங்களை நிறைவேற்றி, பல்வேறு துறைகளில் நாட்டின் முதல் மாநிலமாக திகழ்கிறது.

மத்திய அரசுக்கு அடிமையாக அ.தி.மு.க.,வினர் துணை நிற்கின்றனர். எங்கள் மீது குறை சொல்வதற்கு, வேறு எந்த காரணமும் கிடைக்காததால், சட்டம் - ஒழுங்கு சரியில்லை; தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்கின்றனர்.

இதற்கு, பல்வேறு நேரங்களில் விரிவான விளக்கம் அளித்துள்ளேன்; சட்டசபையிலும் ஆதாரங்களை எடுத்து சொல்லி இருக்கிறேன். பா.ஜ., ஆட்சி நடத்தும் மாநிலங்களை விட, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. அதனால் தான், தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து தொழில் முனைவோர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.

யாரும் வைக்காத கோரிக்கைகளை கூட, நாங்கள் திட்டங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.வாழ்நாள் முழுதும் தமிழ் மொழிக்காக போராடி கொண்டிருக்கிறோம். இரு மொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, 'ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை; அவர் முதல்வராக மாட்டார் என ஜாதகம் சொல்கிறது' என பிரசாரம் செய்தனர். இப்போது, தி.மு.க., இரண்டாவது முறையாக இதுவரை ஆட்சிக்கு வந்ததில்லை என ஜோதிடம் சொல்கிறது. அதையெல்லாம் மீறி, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும்; தொடர்ந்து ஆட்சிக்கு வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement