மீனவர் மீது தாக்குதல்; மூவர் கைது

சூலூர்: சூலூர் அருகே மீனவரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

சூலூர் அடுத்த ராசி பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 48. மீன்பிடிக்கும் தொழிலாளி. இவர் வீட்டுக்கு அருகே வசித்து வரும், சரத்குமார், 19, முருகேசன், 33, கருப்புசாமி, 33 ஆகியோர், மதுக்குடிக்க தென்னம் பாளையம் செல்ல வேண்டும் எனக்கூறி சிவக்குமாரிடம் மொபட் கேட்டுள்ளனர். வண்டியை எடுத்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி கொண்டு வரவில்லை. இதுகுறித்து, சிவக்குமார் மூவரிடமும் கேட்டுள்ளார். இதனால், தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது.

மூவரும் சேர்ந்து இரும்பு கம்பியால், சிவக்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த சிவக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், சரத்குமார் உள்ளிட்ட மூவரையும் நீலம்பூர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement