ஒடிஷா தொழிலாளி கொலையில் நண்பர் கைது

ஹெப்பகோடி: ஒடிஷா தொழிலாளி கொலை வழக்கில், நண்பர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுனில் நாயக், 42, பாசுதேவ் மல்லிக், 30. இவர்கள் இருவரும் பெங்களூரு ஹெப்பகோடியில் தங்கி இருந்து, கூலி வேலை செய்தனர். ஒரே வீட்டில் வசித்தனர்.

ஏழு மாதங்க ளுக்கு முன் சுனில் நாயக், தன் மனைவி புஷ்பாவை, 35, ஹெப்பகோடிக்கு அழைத்து வந்தார். தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். இங்கு பாசுதேவ் அடிக்கடி சென்றார். புஷ்பா மீது அவருக்கு ஆசை ஏற்பட்டது .

கடந்த சில தினங்களுக்கு முன், சுனில் வீட்டிற்கு பாசுதேவ் சென்றார். வீட்டில் சுனில் இல்லை. புஷ்பாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார். கணவர் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை அடிப்பதாக புஷ்பா கூறினார்.

இதனால், அவரது அனுதாபத்தை பெறவும், அவரை திருமணம் செய்து கொள்ளவும் நினைத்த பாசுதேவ், சுனிலை கொலை செய்ய முடிவு செய்தார்.

கடந்த மாதம், 26ம் தேதி இரவு பொம்மசந்திராவில் உள்ள பாரில் இருவரும் மது அருந்தினர். பின், சுனிலை கத்தியால் குத்தி கொலை செய்தார். உடலை சாக்கு பையில் சுருட்டி கால்வாய் அருகே வீசிவிட்டு தப்பினார். உடலை மீட்ட போலீசார் விசாரணையை துவக்கினர்.

மொபைல் போன் டவர் அடிப்படையில், ஒடிஷாவில் பதுங்கி இருந்த பாசுதேவை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement