பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை அனைத்து மனுக்களும் ஏற்பு: 15ல் விசாரணை

பெங்களூரு: பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் அரசின் அறிவிப்பை ஆதரித்து, தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள், பெண் வக்கீல்களின் இடைக்கால மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

கர்நாடகாவில் தனியார் நிறு வனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.

இதை எதிர்த்து கர்நாடகா உரிமையாளர்கள் சங்கத்தினர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், பெங்களூரு உரிமையாளர்கள் சங்கத்தினரும், அரசின் அறிவிப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையில், அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்களின் கவுன்சில், அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் போன்ற அமைப்புகளும், 15 பெண் வக்கீல்களும், அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும், ப ணிபுரியும் பெண்கள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் நேற்று நீதிபதி ஆனந்த் ராமநாத் ஹெக்டே முன் விசாரணைக்கு வந்தது.

பெண் வக்கீல்கள் சார்பில் வக்கீல் அம்ரிதேஷ் வாதிடுகையில், 'சில தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள், மாதவிடாய் விடுப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையில் பணிபுரியும் பெண்கள், இத்தகைய மனுக்களை தாக்கல் செய்ய முடியாது. அத்தகைய பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசின் நடவடிக்கையை உறுதி செய்து, அரசின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.

கர்நாடகா, பெங்களூரு உரிமையாளர்கள் சங்கம், இடைக்கால மனுதாரர்களின் வாதங்களை கேட்ட பின் நீதிபதி ஆனந்த் ராம்நாத் ஹெக்டே கூறுகையில், ''பெங்களூரு உரிமையாளர்கள் சங்கம் மனுவுக்கு மாநில அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படும். உரிமையாளர்களின் மனு, பெண் வக்கீல்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வழக்கு விசாரணை வரும் 15ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement