தேர்தல் முடிந்ததும் தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்

கூடலுார் கேரளாவில் ஏப்.9ல் சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளனர். அதிக வெப்பம், ஏரியில் நீர்மட்டம் குறைவால் வருத்தத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்றாகும். பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே சுற்றியுள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளை கண்டு ரசிப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆனந்தம். மேலும் சீதோசன நிலை குளுமையாக இருக்கும்.

ஆனால் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் மற்றும் கேரளாவில் சட்டசபை தேர்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் ஏப். 9ல் தேர்தல் முடிவடைந்ததால் தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வர துவங்கியுள்ளனர்.


ஆனாலும் அதிக வெப்பம் நிலவுவதால் படகு நிறுத்தப் பகுதி இழந்து காணப்படுகிறது. நீர்மட்டம் மேலும் குறைந்து வருவதால் தற்போதுள்ள படகு நிறுத்தப் பகுதியில் இருந்து 1 கி.மீ., தூரம் தள்ளி படகுகளை நிறுத்தி உள்ளனர். தேர்தல் கெடுபிடிகளால் சுற்றுலா வர தயங்கிய பயணிகள் தற்போது தேக்கடிக்கு வரத் துவங்கிய போதிலும், நீர்மட்டம் குறைவு மற்றும் கடுமையான வெப்பத்தால் புலம்புகின்றனர். கோடை மழை பெய்து நீர்மட்டம் ஏரியில் உயர்ந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

Advertisement