மின்கம்பங்கள் மாற்றுவதில் தாமதம்:  ரவுண்டானா பணிகள் இழுபறி 

உடுமலை: நான்கு வழிச்சாலை சந்திப்பில், மின்கம்பங்கள் மாற்றியமைப்பது இழுபறியாக இருப்பதால், ரவுண்டானா பணிகள் தாமதமாகி வருகிறது.

பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை, உடுமலை - தாராபுரம் ரோட்டில் இணையும் பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அங்கு, பாலப்பம்பட்டியில் இருந்து வரும் அணுகுசாலையும் இணைவதால், வாகனங்கள் தாறுமாறாக சந்திப்பு பகுதியை கடக்கும் போது, வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில், அப்பகுதியில், ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு ஒதுக்கப்பட்டு, முதற்கட்ட பணிகளும் துவங்கியது.

ஆனால், மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், மின்வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. இதனால், ரவுண்டானா பணிகள் தாமதமாகி வருகிறது.

விரைவில் மின்கம்பங்களை மாற்றியமைத்து, ரவுண்டானா அமைத்து சந்திப்பு பகுதியில், நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement