காரைக்கால் மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் விறு விறுப்பாக ஓட்டுப் பதிவு நடந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலையொட்டி, நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி திருப்பட்டினம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது.

காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. ஐந்து தொகுதிகளிலும் 181 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 36 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என, கண்டறியப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. ஓட்டுச் சாவடிகளுக்கு தேர்தல் துறை குடிநீர், கழிப்பறை, பந்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை, வாக்களர்களின் மொபைல் போன்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததால், வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டுப் பதிவு செய்தனர். இதனால், ஓட்டுப் பதிவு விறு விறுப்பாக நடந்தது.

கோவில்பத்து பகுதியில் அமைச்சர் திருமுருகன், எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், சந்திரபிரியங்கா, நாகதியாகராஜன், ராஜசேகரன் ஆகியோர் அவரவர் தொகுதிகளில் உள்ள மையத்தில் ஓட்டளித்தனர்.

இதே போல், கலெக்டர் இஷிதாரதி, சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, துணை கலெக்டர் பூஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் ஓட்டளித்தனர்.

தேர்தல் திருவிழா முன்னிட்டு நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியது.

பேட்டரியில் புகை காரைக்கால், கோத்துகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி ஓட்டுச் சாவடி மையத்தில், காலை 10:30 மணியளவில் வி.வி.பாட் இயந்திரத்தில் உள்ள பேட்டரியில் இருந்து திடீரென புகை வந்ததால் பரபரப்பு நிலவியது.

அதிர்ச்சியடைந்த ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தீயணைப்பு ஊழியர்கள் உதவியுடன் பேட்டரியை சரிசெய்தனர். மீண்டும் ஓட்டுப் பதிவு துவங்கி நடந்தது.

Advertisement