ஏ.பி.எல்., பயனாளிகளிடம் பி.பி.எல்., அட்டை பறிமுதல் செய்ய அமைச்சர் முனியப்பா உறுதி

பெங்களூரு: ''தகுதியவற்றவர்களின் பி.பி.எல்., ரேஷன் அட்டைகளை பறிமுதல் செய்து, தகுதியான பயனாளிகளுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்,'' என உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.

கர்நாடகாவில், 4 லட்சத்துக்கும் அதிகமான அங்கீகரிக்கப்படாத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டைகள் இருப்பதாக, மத்திய அரசு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக அமைச்சர் முனியப்பா நேற்று அளித்த பேட்டி:

வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, 14 லட்சம் ஏ.பி.எல்., அட்டைதாரர்களிடம், பி.பி.எல்., அட்டைகள் வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதை படிப்படியாக நீக்குவோம்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தகுதியானவர்களின் அட்டைகள் நீக்கப்படாது. ஒருவேளை அவை நீக்கப்பட்டால், அவர்கள் வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். நாங்கள் அவர்களுக்கு மீண்டும் பி.பி.எல்., அட்டைகள் வழங்குவோம்.

ஏ.பி.எல்., பிரிவை சேர்ந்தவர்கள் பலர் பி.பி.எல்., கார்டுகள் வைத்துள்ளனர். பி.பி.எல்.,லுக்கு தகுதி இல்லாதவர்களுக்கு, ஏ.பி.எல்., கார்டுதாரர்களாக சேர்க்கப்படுவர்.

மாநிலத்தில் நிலவி வரும் எல்.பி.ஜி., பிரச்னை குறித்து பேச, நாளை (இன்று) ஆலோசனை கூட்டம் நடத்துகிறேன். ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் எரிவாயுவை நம்பி உள்ளது. அவர்களுக்கு எரிவாயு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். நானும் வலியுறுத்தி உள்ளேன்.

மத்தி ய அரசுக்கு ஒரு கடிதமும் எழுதி உள்ளேன். முன்னுரிமை அடிப்படையில், எரிவாயு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து உள்ளோம். அதற்கு என்ன பதில் வருகிறது என்று பார்த்துவிட்டு கூறுவேன்.

கள்ளச் சந்தையில் எரிவாயு சிலிண்டர்கள் விற்பது குறித்து உள்துறை அமைச்சரிடம் பேசுவேன். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி போலீஸ் கமிஷனரிடம் கூறுவேன். நாளை (இன்று) நடக்கும் கூட்டத்தில் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். அவர்கள் என்ன கூறுவார்கள் என்பதை பார்த்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன்.

எரிவாயு பிரச்னையால் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களில் இத்தகைய எரிவாயு பிரச்னைகள் இல்லை. நமக்கு தான் பற்றாக்குறை இருக்கிறது. இதில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கி றது.

நம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் இதை செய்துள்ளார். அவர், அரசியல் ரீதியாக பாரபட்சம் காட்டுகிறார். நம் மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. நம் நகரில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹோட்டல்களை சார்ந்து வாழ்கின்றனர்.

எரிவாயு கிடைக்காததால், ஆட்டோ ஓட்டுநர்கள், மாநில அரசு மீது கோபத்துடன் இருப்பதால் எந்த பயனும் இல்லை. பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகிய அனைத்தும் மத்திய அரசு சம்பந்தப்பட்டவை. எல்லாவற்றுக்கும் அவர்களே பொறுப்பு. எங்களுக்கு இதில் எந்த பங்கும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement