உங்களில் ஒருவனாக இருந்து பிரச்னைகளை தீர்ப்பேன்: த.வெ.க., வேட்பாளர் வாக்குறுதி

காஞ்சிபுரம்:''உங்களில் ஒருவனாக இருந்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்,'' என, த.வெ.க., வேட்பாளர் ரஞ்சித்குமார் வாக்குறுதி அளித்து, பொது மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி த.வெ.க., வேட்பாளர் ரஞ்சித்குமார் நேற்று காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் பிரசாரம் தொடங்கினார். பஞ்சுபேட்டை, சந்தவெளியம்மன்கோவில் தெரு, கைலாசநாதர் பத்தேரி தெரு, ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, அரக்கோணம் சாலை, சங்கர மடம், புதிய ரயில் நிலையம், பூக்கடை சத்திரம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, சுப்புராயர் தெரு, பல்லவர் மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், த.வெ.க., நிர்வாகிகளுடன் ஓட்டு சேகரித்தார். இந்த பிரசாரத்தின் போது, த.வெ.க., தேர்தல் அறிக்கை குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில், த.வெ.க., வேட்பாளர் ரஞ்சித்குமார் பேசியதாவது:

ஒலிமுகமதுபேட்டை பகுதிக்கு, சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரை, பாதாள சாக்கடை குழாய் மூலமாக வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யப்படும். உங்களில் ஒருவனாக இருந்து, அனைத்து வசதிகளையும் மேம்படுத்த உறுதுணையாக இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement