பாலாற்றங்கரையோர கிராமங்களில் கோடையிலும் விவசாய பணி துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலாற்றாங்கரையோர கிராமங்களில், கோடையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தி, நவரை பருவத்திற்கான, நெல் சாகுபடி செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு, ஏரி, மற்றும் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொர்ணவாரி, சம்பா, நவரை உள்ளிட்ட பருவத்தில், ஏ.டி.டி., 36, ஐ.ஆர்.50, கோ 43, கோ 51, குண்டு, வெள்ளை பொன்னி உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை காரணமாக பெரும்பாலான ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால், பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டதால், விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

இருப்பினும், காஞ்சிபுரம் வட்டாரத்தில், பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள விஷார், முசரவாக்கம், முத்துவேடு, விச்சந்தாங்கல், காலுார், பெரியநத்தம், அவளூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடிநீர் விவசாயத்திற்கு போதுமான அளவு உள்ளதால், இப்பகுதி விவசாயிகள், நிலத்தடி நீரை பயன்படுத்தி, சொர்ணவாரி பட்டத்தில், ஏ.டி.டீ.36, ஐ.ஆர்., 36, ஐ.ஆர்., 50, ஏ.டி.டீ.37, கோ4 3, உள்ளிட்ட நெல் ரகங்கள் நடவு செய்ய விவசாய பணியை தொடங்கி உள்ளனர்.

இதில், பவர் டில்லர் வாயிலாக நிலத்தை உழவு செய்தல், உழவு மாடுகளை வைத்து பரம்பு ஓட்டுதல், வரப்பு அண்டை வெட்டுதல், நாற்று விடுதல், நெற்பயிர் நடவு செய்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement