கிடப்பில் ரவுண்டானா திட்டம்: வாகன ஓட்டுனர்கள் திணறல்

உடுமலை: பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, ரவுண்டானா கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.

உடுமலையில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில், உள்ள இந்நகரத்தில், ரோட்டோரத்தில், தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

முக்கிய ரோடுகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள கடைகளுக்கு, போதியளவு 'பார்க்கிங்' வசதி இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகள் குறிப்பிட்ட அளவு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக, மாற்றப்படுகிறது.

பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், இப்பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. உதாரணமாக, நகரப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பட்டது.

நகர எல்லையில் அமைந்துள்ள கொல்லம்பட்டரை பகுதியிலிருந்து கொழுமம் ரோடு சந்திப்பு வரை தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டு, சென்டர்மீடியனும் அமைக்கப்பட்டது.

மேலும், அப்போது, திருப்பூர், தாராபுரம் ரோடு சந்திப்பிலும், பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில், ரவுண்டானா அமைப்பதற்கான திட்ட வரைவு அனைத்து துறை ஆலோசனைகள் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டது. இத்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

வாகன ஓட்டுனர்களை பாதிப்பை தடுக்கும் வகையில், இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement