பூ மார்க்கெட் விவகாரத்தில் தேர்தல் விதி மீறலா ?

திருப்பூர்:மாநகராட்சி பூ மார்க்கெட் ஏல விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் என புகார் எழுந்தது. தேர்தல் பார்வையாளர் விசாரணை மேற்கொண்டார்.

திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மாநகராட்சி பூ மார்க்கெட் வளாகத்தின் ஏல உரிமை கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிய ஏலத்தில் செல்வகுமார் என்பவர் 4.10 கோடி ரூபாய்க்கு உரிமம் எடுத்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் இந்த உரிமம் வழங்கப்பட்டதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், இது விதிமீறல் என்றும் தேர்தல் அலுவலருக்குப் புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், தெற்கு தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஏலதாரர் தரப்பில் கூறுகையில், ஏல நடைமுறைகள் அனைத்தும் கடந்த ஜனவரி மாதமே தொடங்கப்பட்டு விட்டன. பிப்ரவரி மாதம் மாநகராட்சி மன்றம் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஏலத் தொகையை ஐந்து தவணைகளாகச் செலுத்தி, கடைசித் தொகையை மார்ச் 13-ம் தேதியே டி.டி.யாகச் செலுத்திவிட்டேன். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே (மார்ச் 16) உரிமத்திற்கான கடிதமும் நிர்வாக ரீதியாகத் தயாராகிவிட்டது. இதில் தேர்தல் விதிமீறல் எங்கும் நடைபெறவில்லை. மாநகராட்சி கமிஷனரும் இதுதொடர்பாகத் தேர்தல் அலுவலருக்கு விளக்கம் அளித்துள்ளார். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ''தற்போதைய ஏலதாரர் உயர்த்திய புதிய வாடகை கேட்கிறார். நாங்கள் பல ஆண்டுகளாக இந்த வியபாரத்தை நம்பித்தான் உள்ளோம். தற்போது மார்க்கெட்டைச் சுற்றிலும் பல தனியார் கட்டடங்களில் பூக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மார்க்கெட்டுக்கு வெளியே செயல்படும் கடைகளால் எங்கள் வியாபாரம் பாதிக்கிறது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. ஏலதாரர், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

---
.

Advertisement