வீடுகள் இடையே போதிய இடைவெளி இல்லை :ரூ. 18 கோடி அரசு திட்டத்தை ஆய்வு செய்யணும்

கூடலுார்: கூடலுார் வடவயல் பகுதியில், 18 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நகர் அமைப்பதற்காக கட்டப்படும், 200 வீடுகள் இடையே போதிய இடைவெளி இல்லை,' என, புகார் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஏப்.,மாதம் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற மாநில முதல்வர் ஸ்டாலின், 'கூடலுார் பகுதியில், 300 வீடுகளுடன் கலைஞர் நகர் அமைக்கப்படும்' என, தெரிவித்தார்.

இத்திட்டத்துக்காக கூடலுார் வடவயல் பகுதியில், தனியார் கைவசம் இருந்த, 7.4 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய் துறையினர், கூடலுார் ஊராட்சி ஒன்றியத்திடம் ஒப்படைத்தனர். அப்பகுதியில முதல் கட்டமாக, அடிப்படை வசதிகளுடன் தலா, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், 200 வீடுகள் அமைப்பதற்காக 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்பகுதியிலிருந்த தேயிலை செடிகள், சில்வர்ஓக் மரங்கள் அகற்றப்பட்டு, வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இங்கு கட்டப்படும் வீடுகள் ஒவேலி ஆத்துார், சீப்புரம் பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் வீடுகளுக்கும் இடையே போதிய இடைவெளி இன்றி, வீடுகள் கட்டப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் சூழல் ஏற்படும். எனவே, இப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஒவ்வொரு வீடுகளுக்கு இடையேயும் போதிய இடைவெளியிட்டு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், ' இந்த புகாரை தொடர்ந்து, வீடுகள் கட்டும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின் அப்பகுதியில் ஆய்வு செய்து, முடிவு செய்யப்படும்,' என்றனர்.

Advertisement