செலவு கணக்கு முறையாக சமர்ப்பிக்க வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்

சூலூர்: வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை முறையாக சமர்ப்பிக்க வேண்டும், என, சூலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன் அறிவுறுத்தினார்.

சூலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டபின், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்ற கூட்டம் சூலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர் கிருஷ்ணா ஆதித்யா, செலவின பார்வையாளர் ஜான்சி சாந்தகுமாரி ஆகியோர் பங்கேற்றனர்.

அதிகாரிகள் பேசுகையில்,' ஒரு வேட்பாளர், 40 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஒவ்வொரு செலவுக்கான ரசீதுகள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஒரு நாளில், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக செலவு செய்ய வேண்டும். அதற்கு மேல் செலவு என்றால், வங்கி கணக்கு மூலமாக செய்ய வேண்டும். தினப்படி செய்யும் செலவுகளை முறையாக பாரமரிக்க வேண்டும். மூன்று முறை தாலுகா அலுவலகத்தில் உள்ள, தேர்தல் செலவு கணக்கு அலுவலர்களிடம் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். சந்தேகங்கள் இருப்பின் அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்,' என்றனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் பேசுகையில், தேர்தல் செலவு கணக்கில் குளறுபடி இருந்தால், வெற்றி பெற்றிருந்தாலும் அந்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு விபரங்களை நாளிதழ்களில் வெளியிட வேண்டும். பணமோ, பரிசு பொருட்களோ கொடுக்க கூடாது, என்றார்.

Advertisement