விரிவாக்கம் செய்யாத ரோட்டில் திணறல்: பல கிராம மக்கள் வேதனை

உடுமலை: பூசாரிபட்டி - எரிசனம்பட்டி ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை; குறுகலான ரோட்டால், வாகன ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், பூசாரிபட்டி அருகே, எரிசனம்பட்டி ரோடு பிரிகிறது. இந்த ரோட்டில் சீலக்காம்பட்டி, மலையாண்டிப்பட்டணம், கூளநாயக்கன்பட்டி, குண்டலப்பட்டி, பாப்பனுாத்து, உடுக்கம்பாளையம் உட்பட பல கிராமங்கள் அமைந்துள்ளன.

தென்னை சாகுபடி பிரதானமாக உள்ள இப்பகுதியில், தென்னை நார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிகளவு இயங்குகின்றன.

இந்த ரோடு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைக்கு இணைப்பு ரோடாக இருப்பதால், போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

மேலும், தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை பொள்ளாச்சி, நெகமம் உட்பட பகுதிகளுக்கு கொண்டு செல்ல, கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் செல்வது அதிகரித்துள்ளது.

இவ்வாறு, போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரோடு பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. கிராமங்களை கடக்கும் பகுதியில், ரோட்டில் அபாய வளைவுகள் அதிகமுள்ளன.

வளைவு பகுதியில், எதிர் எதிரே வாகனங்கள் கடந்து செல்ல முடியாத அளவுக்கு ரோடு குறுகலாக உள்ளது.

ஒரு வழித்தடமாக உள்ள இந்த ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த ரோட்டில், பொள்ளாச்சி, உடுமலை, நெகமம் உட்பட பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அபாய வளைவுகளில், ரோட்டோர தடுப்பு அமைத்தல், ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement