சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கடத்தல்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் வளர்க்கப்படும் சில்வர் மரங்கள் அனுமதி இல்லாமல் வெட்டி கடத்துவது தொடர்கிறது.

நீலகிரி மாவட்ட, தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்கள், வெயில் காலத்தில் தோட்டங்களுக்கு நிழல் தருவதுடன், மரத்தின் கிளைகளை விவசாயிகள் விறகாக பயன்படுத்தி வருகின்றனர்.

முதிர்ந்த மரங்கள் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அனுமதியுடன் விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக, வியாபாரிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்ளில் முறையாக அனுமதி பெறாமல், மரங்களை குறைந்த விலைக்கு வாங்கி, கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சாமில்களில் விற்பனை செய்து, லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

சில வியாபாரிகள் பெயரளவுக்கு ஒரு சில மரங்களுக்கு மட்டும் அனுமதி வாங்கி, சம்பந்தப்பட்ட அலுவலர்களை 'கவனித்து' தோட்டத்தில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டி கடத்துவது அதிகரித்துள்ளது.

கோத்தகிரி பகுதியில் பொருத்தமட்டில், பில்லிக்கம்பை, கக்குச்சி மற்றும் இடுஹட்டி பகுதிகளில் மரங்கள் அதிகளவில் வெட்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வெட்டப்படும் மரங்கள் போக்குவரத்து அதிகம் இல்லாத சாலை ஓரங்களில் லாரிகளில் ஏற்றி, இரவு நேரத்தில் கடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தேர்தல் பணிக்காக பெரும்பாலான அதிகாரிகள் சென்று விடுவதால் அனுமதியில்லாமல் மரங்களை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மக்கள் கூறுகையில், 'கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement