வடமாநில வாலிபரை கழுத்தறுத்து கொலை செய்த ஆடு வியாபாரி சரண்

குளித்தலை:பேச முடியாத வட மாநில வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆடு வியாபாரி போலீசில் சரண் அடைந்தார்.

கரூர் மாவட்டம், வரகூர் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, 40 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் சுற்றி திரிந்துள்ளார். கிராம மக்கள் புகார்படி, லாலாபேட்டை எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் சம்பவ இடத்தில் விசாரித்தார். அதில், அவர் வாய் பேச முடியாத வட மாநில நபர் என தெரிந்தது.

அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த, மது போதையில் இருந்த ஆடு வியாபாரி பிரபு, 35, என்பவர், 'இவரை, நான் அய்யர்மலை பகுதியில் விட்டு விடுகிறேன்' என கூறியதால் எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன் சென்று விட்டார்.

பின், அந்த வாலிபரை பிரபு தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, கட்டிலில் படுத்துகொள்ளுமாறு கூறியுள்ளார். போதையில் இருந்த பிரபு, ஆடு அறுக்கும் கத்தியால் வட மாநில வாலிபரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.

இதையடுத்து நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் கத்தியுடன் சென்று, 'வட மாநில நபரை கொலை செய்து விட்டேன்' என கூறி, பிரபு சரண் அடைந்தார்.

டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், 'கொலை செய்யப்பட்டவர் இரவில் பகவதிஅம்மன் கோவில் பகுதி மற்றும் தெருக்களில் சுற்றி திரிந்துள்ளார். வாய் பேச முடியாத அவர், வட மாநிலத்தவரை போல தெரிகிறது' என்றனர்.

சரண் அடைந்த ஆடு வியாபாரி பிரபு கூறுகையில், ''இரவு, தன் வீட்டு கட்டிலில் துாங்கும் போது என்னை முறைத்து பார்த்தார். அதனால், நான் ஆடு அறுக்கும் கத்தியால், அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன்,'' என்றார்.

'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்த்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்க உள்ளனர்.

Advertisement