கொளுத்தும் வெயிலில் மக்கள் தவிப்பு ஏ.சி. விற்பனை 70 சதவீதம் அதிகரிப்பு

கோவை: எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதமே அதிகரித்து விட்டது. பகலில் மட்டுமல்ல, இரவு நேரங்களிலும் புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் வியர்வையில் தவிக்கின்றனர். இதனால் கோவையில் ஏ.சி. பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 70 சதவீதம் ஏ.சி. விற்பனை அதிகரித்து இருப்பதாக எலக்டரானிக்ஸ் பொருள் விற்பனையாளர்கள் சொல்கின்றனர். கோவை பாரத் எலக்ட்ரானிக்ஸ் துணை பொதுமேலாளர் அபு கூறியதாவது:

2024ல் கோடை வெயில் அதிகம் இருந்ததால் ஏ.சி.விற்பனை அதிகரித்தது. 2025 ல், வெயில் காலத்திலேயே மழை துவங்கி விட்டது. அதனால் ஏ.சி. விற்பனை குறைந்தது. இந்த ஆண்டு, பிப்ரவரியில் இருந்தே வெயில் அதிகமாகி விட்டது. மே மாதம் இன்னும் அதிகரிக்கும். அதனால் கடந்த 2 ஆண்டுகளை விட, இப்போது ஏ.சி விற்பனை 70 சதவீதம் உயர்ந்துள்ளது.

முன்பெல்லாம் சொந்த வீட்டில் வசிப்பவர்கள்தான் ஏ.சி. வாங்கினர். இப்போது வாடகை வீட்டில் வசிப்பவர்களும் வாங்குகின்றனர். பெரும்பாலும் 1.5 டன் ஏ.சி.யை விரும்பி வாங்குகின்றனர். ஜி.எஸ்.டி. குறைப்பால் விலை குறைந்தது. ஆனால், இப்போது எல்லா கம்பெனிகளும், புதிய தொழில்நுட்பத்தில் கூடுதல் வசதிகளுடன் ஏ.சி. தயாரிப்பதால், விலையும் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. ஈரான் போரால், மேலும் 7 சதவீதம் உயர்ந்தது. இந்த உயர்வு தற்காலிகமானது.

Advertisement