காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கிருஷ்ணகிரி : தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், சிறப்பு அபிேஷகம் நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள் பாலித்தார். பகல், 12:00 மணிக்கு காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.



இதில், ஏராளமான பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சையில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின், பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டை தக்ஷ்ண காலபைரவர் கோவில் மற்றும் கந்தி குப்பம் காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement