வீடு இல்லாதோருக்கு வீட்டுமனை :பூண்டியில் ராஜேந்திரன் பிரசாரம்

திருவள்ளூர்: தி.மு.க., வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் நேற்று, பூண்டி ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, கிராம பெண்கள் மலர் துாவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவள்ளூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., வேட்பாளராக வி.ஜி.ராஜேந்திரன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவர், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினருடன், பூண்டி ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிளேஸ்பாளையம், அல்லிகுழி, அரும்பாக்கம், திருப்பேர், சென்றாயன்பாளையம், தோமூர், காரணி நிஜாம்பட்டு உள்ளிட்ட குக்கிராமங்களில், வி.ஜி.ராஜேந்திரனுக்கு திரளான பெண்கள் மலர் துாவி வரவேற்பு அளித்தனர்.

பின், வேட்பாளர் ராஜேந்திரன், பெண்களின் அன்பால் வேனில் இருந்து கீழே இறங்கி, அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அப்போது, ஆரத்தி எடுத்து, வேட்பாளரை வரவேற்றனர்.

பின், ராஜேந்திரன் பேசியதாவது:

வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளோம். முதல்வரின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, மாதாந்திர மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டத்தில் அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, கல்லுாரி பயிலும் போது மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை என, ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார்.

தற்போது, வீடுகள் தோறும் 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன், மகளிர் உரிமைத்தொகை 2,000 என, புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளார். இந்த ஆட்சி தொடர, மீண்டும் ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராக, தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்து, ஓட்டு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளருடன், தி.மு.க., - காங்., - ம.தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement