'வீரமரணம்' ராணுவ வீரருக்கு 33ம் ஆண்டு நினைவஞ்சலி

பெ.நா.பாளையம்: காஷ்மீர் எல்லையில் பாக்., தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீரமரணமடைந்த ராணுவ வீரருக்கு பெரியநாயக்கன்பாளையம் அருகே நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே, நாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த கண்ணாளன் கென்னடி, 1993ம் ஆண்டு ஏப். 11ம் தேதி காஷ்மீரில் உள்ள சம்சாபாரி என்ற இடத்தில், பனிப்பிரதேச மலையில் காவல் பணியில்இருந்தார்.

அப்போது, பாக்., தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்களை எதிர்த்து நின்று, ஆறு தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீரமரணம் அடைந்தார்.

இவரது வீர மரணத்தை கவுரவிக்கும் வகையில், இந்திய அரசு, 1994ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய 'கீர்த்தி சக்ரா' விருதை, அப்போதைய ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா, கென்னடியின் குடும்பத்துக்கு வழங்கினார். கென்னடியின் நினைவாக, நாயக்கன் பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில், அவர் ராணுவத்தில் இருந்தபோது பயன்படுத்திய பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில், ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

நடப்பாண்டு நேற்றுமுன்தினம் நடந்த 33வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி சுபேதர்கள் ஜேசுதாஸ், சுனில், ஹவில்தார்கள் விக்னேஷ், முத்து நாயக், வினோத், ராகேஷ், ஆகாஷ், நித்திஷ் உட்பட 10 ராணுவ வீரர்கள் பங்கேற்று, மணிமண்டபத்தில் உள்ள கண்ணாளன் கென்னடி படத்துக்கு மலர் வளையம் வைத்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

பெரியநாயக்கன்பாளையம் யு.ஐ.டி., கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் உட்பட பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Advertisement