சாத்தான்குளம் வழக்கு தண்டனை; போலீசாருக்கு கடும் எச்சரிக்கை

22

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில், தந்தை - மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர், விசாரணை என்ற பெயரில் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், மதுரை நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

அதில், குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு, இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி. இந்த வழக்கில் போலீசார் செய்தது மிகவும் கொடூரமான குற்றம் என்பதுடன், நீதித் துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வர வேண்டுமெனில், கடுமையான தண்டனை விதிப்பதே சரியாக இருக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு, கொரோனா பரவல் காலத்தில் நாட்டையே உலுக்கிய சம்பவம்; அதேபோல, அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பும், முன்மாதிரி தீர்ப்பாக அமைந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒன்பது போலீசாரும் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தும், அவர்களால் சாட்சிகள் மிரட்டப்படுவர் என்ற சி.பி.ஐ., தரப்பு வாதத்தை ஏற்று, அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. அதனால், 2020 முதல் தற்போது வரை, ஒன்பது பேரும் சிறையில் தான் உள்ளனர்.

'தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி' என்று சொல்லப்படுவது உண்டு. அப்படி இழுத்தடிக்கப்பட்ட பல வழக்குகளில், குற்றம் செய்தவர்கள் தப்பித்த வரலாறு உண்டு. ஆனால், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க ஆறு ஆண்டுகள் ஆனாலும், சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதே பலரின் கருத்து.

காவல் நிலைய மரணங்கள் மற்றும் காவல் துறையினரின் கொடூரங்கள் என்பது, தமிழகத்தில் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் அவ்வப்போது நடந்து வருகின்றன. அவை பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன.

ஆனாலும், சாத்தான்குளம் கொடூரம், அநீதி மற்றும் சட்டமீறலின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தியது. சட்டத்தை மதிப்பவர்களாக, பொறுப்புடனும், கண்ணியத்துடனும் வாழ்ந்து வந்த இருவர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டது, பொதுமக்களுக்கு தெரியவந்த போது, அவர்கள் வெகுண்டு எழும் சூழ்நிலையும் உருவானது.

கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளை மீறி, கூடுதல் நேரம் தங்களது மொபைல் போன் கடையை திறந்து வைத்திருந்தது மட்டுமே இறந்த தந்தை, மகன் செய்த குற்றமாகும். அவர்களை எச்சரிக்கை செய்து விட்டிருக்கலாம். அதை விடுத்து கொடூரமாக அடித்துக் கொன்றது, மன்னிக்க முடியாத செயலாகும்.

மேலும், போலீஸ் பணியில் சேரும் சிலர், காக்கி சட்டையை அணிந்தவுடன், தங்களுக்கு ஏதோ வானளாவிய அதிகாரம் கொடுத்து விட்டது போல செயல்படுவதும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போல நடந்து கொள்வதும் இன்றும் நடைமுறையில் உள்ளது. இதன் வாயிலாக, அப்பாவிகளை அவர்கள் கொடுமைகளுக்கு ஆளாக்குவதும் தொடர்கிறது. அதற்கு போலீசார் எதிர்கொள்ளும் கடுமையான பணிச்சுமையும் முக்கியமான காரணமாகும்.

அதனால், மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கான அதிநவீன தொழில் நுட்பங்களையும் மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்த வேண்டும்.

அத்துடன், பொதுமக்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ளும் வகையில், கடுமையான பணி விதிமுறைகளை உருவாக்க வேண்டும். லஞ்சம் பெறுவதற்காக அப்பாவிகளை துன்புறுத்தும் நடைமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சி.பி.ஐ., விசாரித்த இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, நாகரிக சமூகத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது. காவல் துறை சித்ரவதை மற்றும் காவல் மரணங்களுக்கு எதிராக, அவ்வப்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு பலன் அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

இந்த வழக்கில் விதித்த மரண தண்டனையானது, எதிர்காலத்தில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளிடம் அத்துமீறி செயல்படும் காவல் துறையினருக்கு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இதன் பிறகாவது, சட்டத்தை மீறும் போலீசாரின் செயல்பாடுகளில் மாற்றம் வரும் என நம்பலாம்.

Advertisement