வெளி மாவட்டங்களுக்கு செல்லும் கோரைக் கிழங்கு

கீழடி: கீழடி அருகே பாட்டம் கிராமத்தில் மருத்துவ பயன்பாட்டிற்காக கோரைக் கிழங்குகளை சுத்தம் செய்யும் பணியில் கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சித்த மருத்துவத்தில் கோரைக்கிழங்கை பயன்படுத்துகின்றனர். நீண்ட நாட்களாக விவசாயம் செய்யாத நிலங்களில் கோரைக்கிழங்கு அதிகளவு கிடைக்கும், நிலங்களை சுத்தம் செய்யும் விவசாயிகள் கோரைக்கிழங்கு செடிகளை அகற்றி விடுவது வழக்கம், இதனை சித்த மருத்துவத்திற்காக கூலி தொழிலாளர்கள் மொத்தமாக சேகரித்து அவற்றை சுத்தம் செய்து விருதுநகர் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

கீழடி அருகே பாட்டம் கிராமத்தில் கோரை கிழங்குகளை சேகரித்து மொத்தமாக குவித்து சுத்திகரித்து வருகின்றனர். சாதாரணமாக அரிசி ஆலைகளில் கல், மண் பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் கோரை கிழங்கை சுத்தம் செய்கின்றனர். சித்த மருத்துவம் தவிர வாசனைப் பொருட்கள் தயாரிக்கவும் கோரைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.

சராசரியாக ஒரு ஏக்கரில் 100 முதல் 300 டன் வரை கோரைக்கிழங்கு கிடைக்கும், 10 வருடத்திற்கு மேல் தரிசாக உள்ள நிலங்களில்தான் அதிகளவு கோரைக்கிழங்கு கிடைக்கும், பாட்டம் கிராமத்தில் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோரை கிழங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூலி தொழிலாளி சின்னகலச்சி கூறுகையில், பாட்டம், பொட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே பொய்த்துவிட்டது. சுற்று வட்டார ஏழு கிராமங்களில் இருந்து கோரை கிழங்கை சேகரித்து குவித்து வைத்துள்ளோம், சுத்திகரித்த பின் அவற்றை வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள், தலைவலி, காய்ச்சல் உள்ளிட்டவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கோரை கிழங்கிற்கு உண்டு, என்றார்.

Advertisement