இது மதவாத சக்திகளும், முற்போக்கு சக்திகளும் நேருக்கு நேர் மோதும் தேர்தல் திருச்சுழியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

காரியாபட்டி: திருச்சுழி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்கம் தென்னரசு பாறைக்குளம், கொட்டம், கீழக்கண்டமங்கலம், தமிழ்பாடி, முத்துராமலிங்கபுரம், நார்த்தம்பட்டி, கல்லுாரணி, குல்லம்பட்டி, சவ்வாசுபுரம், குலசேகரநல்லூர், மாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல், தமிழ்நாட்டுக்கும் டில்லிக்கும் இடையிலான தேர்தல். ஒருபுறம் மதவாத சக்திகளும், மறுபுறம் முற்போக்கு சக்திகளும் நேருக்கு நேர் மோதும் தேர்தல். இந்தப் போட்டியில் முற்போக்கு சக்திகள் வெல்வதுதான் இந்தியாவின் எதிர்காலத்துக்கு சரியான வழிகாட்டுதலை அளிக்கும்.

இப்பகுதியில் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் தனிப்பட்ட கவனம் செலுத்தி வந்துள்ளேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பவன். தோளோடு தோள் நின்று பயணிக்கும் உங்கள் சகோதரனாகவே இருப்பேன். உங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் எந்த தயக்கமுமின்றி, உரிமையோடு என்னிடம் தெரிவியுங்கள். அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன், தற்போது ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் திட்டத்தையும் அறிவித்துள்ளோம். மகளிர் உரிமைத் தொகை அடுத்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும், என்றார்.

வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்ட போது ஒரு குழந்தை அவரது கண்ணாடியைத் தொட்டு விளையாடியது. இது வேண்டுமா என புன்னகைத்தபடி குழந்தையுடன் விளையாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement