100 கோடி அமெரிக்க டாலர், அழகான பெண் : துருக்கியிடம் கேட்கிறார் உகாண்டா ராணுவ தளபதி

8

கம்பாலா: சோமாலியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உகாண்டா ராணுவம் உதவியதற்காக, 100 கோடி அமெரிக்க டாலர் நிதி மற்றும் அழகான பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என உகாண்டா ராணுவ தளபதி, துருக்கிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.



உகாண்டா அருகே உள்ள நாடு சோமாலியா. இங்கு அல்- - ஷபாப் பயங்கரவாதிகள் பல பகுதிகளை கட்டுப்படுத்தி வந்தனர். அவர்களுக்கு எதிராக, 20 ஆண்டுகளாக உகாண்டா ராணுவம் போர் புரிந்து வருகிறது. ஆப்ரிக்க யூனியன் திட்டத்தின் ஒரு பகுதியாக உகாண்டா படையினர் சோமாலியாவில் சட்டம் - ஒழுங்கை ஏற்படுத்தினர். அதன்பின் சோமாலியாவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களில் துருக்கி முதலீடு செய்தது.இதற்கு உகாண்டா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 'எங்கள் படை வீரர்கள் ரத்தம் சிந்தி அமைதியை ஏற்படுத்தினால், அதை வைத்து துருக்கி லாபமடைகிறது' என உகாண்டா ராணுவ தளபதி முஹூஸி கைனெருகபா கூறி வருகிறார். இவர் உகாண்டா அதிபர் முசவேனியின் மகன்.



இந்நிலையில், முஹூசி கைனெருகபா விநோதமான ஒன்றை கேட்டு உள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கையில், சோமாலியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உகாண்டா ராணுவம் பயன்படுத்தப்பட்டதற்காக 100 கோடி அமெரிக்க டாலர் பணம் பாதுகாப்பு லாப பங்காகவும் மற்றும் துருக்கியின் மிகவும் அழகான பெண்ணை தனக்கு மனைவியாக்க வேண்டும். இதனை செய்ய தவறினால், துருக்கி விமானங்கள், எங்கள் வான் எல்லையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.


இங்குள்ள தூதரகத்தை மூடுவோம். அந்நாட்டில் உள்ள எங்கள் தூதரகத்தை மூடினாலும் எங்களுக்கு கவலையில்லை.உகாண்டா மக்கள் பாதுகாப்பு கருதி துருக்கி செல்வதை தவிர்க்க வேண்டும்.

1 லட்சம் உகாண்டா ராணுவ வீரர்களுடன் எனது தலைமையில் இஸ்ரேல் சென்று, இயேசு பிறந்த நிலத்தை பாதுகாக்க தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த மிரட்டல், இருநாட்டு உறவுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது.

பழைய வரலாறு



உகாண்டா ராணுவ தளபதி இவ்வாறு கேட்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2022 ம் ஆண்டு. உலகின் மிகவும் அழகான 100 அங்கோல் பசுக்களை தருவதாகவும், அதற்கு பதிலாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதனை நிராகரித்தால், இத்தாலியை நாங்கள் கைப்பற்றுவோம் எனக்கூறினார்.


இது அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவரது தந்தையும் உகாண்டாவின் அதிபருமான யோவேரி முசவேனி மன்னிப்பு கோரினார். சகோதரத்துவ நாடுகளின் விஷயங்களில் தலையிடுவதற்கு மகனை கண்டித்தார்.


2022ல் கென்யா மீது படையெடுக்கப்போவதாகவும் முஹூசி, மிரட்டல் விடுத்து இருந்தார். இதனால், மகனது பதவியை தற்காலிகமாக பறித்த அதிபர், கென்யாவிடம் மன்னிப்பு கேட்டார்.

Advertisement