மீன்பிடிதுறைமுகம் பிரச்னைக்கு தீர்வு :அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் உறுதி

செய்யூர்:'' அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் கடப்பாக்கம் மீன்பிடிதுறைமுகம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் உறுதியளித்தார்.

செய்யூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பாக போட்டியிடும் ராஜசேகர் நேற்று இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம், ஆலம்பரைக்குப்பம், வேம்பனுார், கப்பிவாக்கம், கோட்டைக்காடு, கரும்பாக்கம், வெண்ணாங்குப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அனைத்து பகுதிகளிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன.

வாக்கு சேகரிப்பின் போது அவர் பேசியதாவது:

பொதுமக்கள் மற்றும் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மீனவர்கள் தங்களது வளைகளை பாதுகாப்பாக வைக்க மீன்வலைபாதுகாப்புக் கூடம், கபடி விளையாட்டு மைதானம், சாலை மற்றும் குடிநீர் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்.

பேரூராட்சி மக்களுக்கு நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்கப்படும்.

கடப்பாக்கம் அடுத்த ஆலம்பரைக்குப்பம் பகுதியில் மீனவர்களின் நலன்கருதி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 235 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டன. பின் தி.மு.க., ஆட்சி அமைந்த பின் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் மீனவ மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆகையால் நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரம் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இடைக்கழிநாடு பேரூராட்சி அ.தி.மு.க., செயலர் ஆறுமுகம் மற்றும் தேசிய ஜனநாய கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement