தேர்தல் பணிகளில் அலட்சியம் காட்டும் கலெக்டர்!
பில்டர் காபியை பருகியபடியே, ''இலவச, 'ஸ்மார்ட் போன்' தருவேன்னு வாக்குறுதி குடுத்திருக்கார் ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த கட்சி வேட்பாளரை சொல்றீங்க...'' என, கேட்டார் அந்தோணிசாமி.
''மதுரை வடக்கு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரா, அந்த கட்சியின் மருத்துவ அணி இணை செயலர், டாக்டர் சரவணன் போட்டியிடறார்... இவர், கட்சி தலைமை தந்திருக்கற வாக்குறுதிகளுடன், தனிப்பட்ட முறையில், தன் தொகுதி மக்களுக்கு, 15 வாக்குறுதிகளை தந்திருக்கார் ஓய்...
''அதாவது, தொகுதி மக்கள், என்னோட மருத்துவமனையில், சலுகை கட்டணத்தில் சிகிச்சை எடுத்துக்க, காப்பீடு அட்டை தரப்படும்... அதுல, அறுவை சிகிச்சைக்கு, 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி...
''கல்லுாரி, மாணவ - மாணவியருக்கு இலவச ஸ்மார்ட் போனுடன், மாதம், 250 ரூபாய்க்கு இலவசமா, 'ரீசார்ஜ்' செய்யப்படும்... தொகுதி மக்கள் குறைகளை தெரிவிக்க, 'டோல் ப்ரீ' எனும் கட்டணமில்லா தொலைபேசி எண், மகளிருக்கு சிறு தொழில்கள் அமைத்து தரப்படும்... இளைஞர்கள் தொழில் துவங்க, குறு நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி தரப்படும்னு, 15 வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்களா வழங்கி, ஓட்டு சேகரிச்சுண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''குடிக்க தண்ணீர் இல்லாம, மக்கள் கஷ்டப்படுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவுல இருக்கிற தளுகை பஞ்சாயத்துல, சமத்துவபுரம் அமைச்சிருக்காவ... இங்க, 100 வீடுகள் கட்டி, பயனாளிகளுக்கு ஒதுக்கினாவ வே...
''இதுல நிறைய முறைகேடு நடந் துட்டதா போராட்டம் எல்லாம் நடந்துச்சு... ஒரு வழியா அதை சரிக்கட்டி, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முதல் நாள் தான், எல்லாருக்கும் வீடுகளை ஒதுக்கினாவ வே...
''வீடு குடுத்தவங்க, குடிக்க தண்ணீர் தராம விட்டுட்டாவ... 'ரெண்டு நாளைக்கு ஒரு முறையாவது தண்ணீர் விடுங்க'ன்னு சமத்துவபுரம் மக்கள் கேக்காவ...
''அதோட, பெரும்பாலான வீடுகள் முன்புறம் அமைச்சிருக்கிற பைப்புகள்ல, பித்தளை குழாய்களை ராத்திரியில மர்ம நபர்கள் திருடிட்டு போயிட்டாங்க... ஊராட்சி செயலரும், உப்பிலியபுரம் பி.டி.ஓ.,வும் இதை எல்லாம் கண்டுக்காம, கமுக்கமா இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பிரகாஷ், ஸ்ரீதர் இதையும் கேட்டுட்டு கிளம்புங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''ஓட்டுச்சாவடி பணிகள் எல்லாம் முடங்கி கிடக்குதுங்க...'' என்றார்.
''எந்த தொகுதியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, சோழிங்கநல்லுார் தொகுதிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் தான் தேர்தல் அதிகாரி... தேர்தல் தேதியை அறிவிக்கிறதுக்கு முன்னாடி தான், ஹெலன் என்ற பெண் அதிகாரியை இங்க கலெக்டரா நியமிச்சாங்க...
''சோழிங்கநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகள்லயும் முன்னேற்பாடு பணிகளை செய்ய, கலெக்டருக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு, இதுவரை செலவு தொகை விடுவிக்காம இருக்காங்க...
''இது பத்தி கலெக்டருக்கு தெரியப்படுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்காம அலட்சியமா இருக்காங்க... தேர்தல் தேதி நெருங்கிட்டு இருக்கிற சூழல்ல, கலெக்டர் இப்படி அலட்சியமா இருக்கிறது பத்தி, தேர்தல் கமிஷனுக்கு பலரும் புகார்களை அனுப்பியிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.
மேலும்
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை
-
துணை ராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு