வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் பீஹாரில் 13 பேர் உயிரிழப்பு

கதிகார்: பீஹாரில், பஸ், சரக்கு வாகனம், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர்.

30 பேர் காயம் பீஹாரின் கதிகார் மாவட்டத்தில் உள்ள கெரபாரி என்ற பகுதி அருகே, நேற்று முன்தினம் மாலை சரக்கு வாகனம் ஒன்று சென்றது.

கண்காட்சிக்கு சென்று திரும்பிய அந்த வாகனத்தில், 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அப்போது, அந்த வாகனத்தின் மீது எதிரே வந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

மேலும், அந்த பஸ் எதிரே வந்த லாரி மற்றும் பைக் மீதும் அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பலியாகினர்; 30 பேர் காயம் அடைந்தனர்.

இவர்களில், ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

நிவாரண நிதி இறந்தவர்களில் பெரும்பாலானோர், பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாயும் வழங்கப்படும் என, அறிவித்தார்.

விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்க அவர் உத்தரவிட்டார்.

Advertisement