திமுக தொடர்ந்து ஆட்சி இல்லை; இந்த முறை மக்கள் நிராகரிப்பார்கள்: நயினார் நாகேந்திரன்

2


திருநெல்வேலி: திமுக தொடர்ந்து ஆட்சி இல்லை; இந்த முறை மக்கள் நிராகரிப்பார்கள் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின், நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ தேசிய தலைவர்களை மதிக்கும் கட்சியாகும். அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோருக்கு மட்டுமன்றி, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மகத்தான தலைவர். மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.14.5 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்குகளில் தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறார். திருக்குறளை பல மொழிகளில் பரப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. மின் கட்டணம், சொத்துவரி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சி செய்த வரலாறு இல்லை. இந்த முறையும் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்.



நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து மக்கள் முடிவுதான் முக்கியம்; சமூக வலைதளங்களை வைத்து முடிவு சொல்ல முடியாது. வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வாக, தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும். பிரதமர் மோடியும், இபிஎஸ்யும் இணைந்து செயல்பட்டால்தான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement