சேதமடைந்த கம்பத்தை அகற்றி புதிதாக அமைக்க கோரிக்கை

திருவாலங்காடு: வேணுகோபாலபுரம் கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் கிராமத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, 350க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருவாலங்காடு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, எலும்புக்கூடாக மாறியுள்ளது.

மேலும், மின்கம்பத்தின் அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்து அச்சத்துடனே அப்பகுதி மக்கள் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement