ஒருபோதும் காசு, பதவிக்காக நான் தடம் மாற மாட்டேன்: நடிகர் ராமராஜன் விளக்கம்

சென்னை: ''காசுக்காகவோ, பதவிக்காகவோ ஒருபோதும் என் லட்சியத்தை மறந்து தடம் மாற மாட்டேன்,'' என அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நடிகர் ராமராஜன் கூறினார்.

அ.தி.மு.க.,வில் இருக்கும் நடிகர் ராமராஜன் அக்கட்சி சார்பில், எம்.பி.,யாகவும் இருந்தவர். தற்போது அவர், இந்த தேர்தலில் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். எனவே, அவர் கட்சி மாறிவிட்டார் என தகவல்கள் பரவின.

இந்நிலையில், ராமராஜன் வெளியிட்ட அறிக்கை: நான் என்றும் மதிப்பளிக்கும் தெய்வங்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் நடப்பதே என் ஆயுள் உறுதிமொழி. காசுக்காகவோ, பதவிக்காகவோ என் லட்சியத்தை மறந்து, அரசியலிலும், சினிமாவிலும் ஒருபோதும் நான் தடம் மாற மாட்டேன்; என் தன்மானம் குறைய இடம் தரமாட்டேன்.

இந்த தேர்தலில், மதுரை மேலுார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும், என் திரையுலக வாழ்வு தொடங்க காரணமாக இருந்த தியேட்டர் முதலாளி அம்பலக்காரரின் மகன் முருகனுக்கும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிடும், என் 35 ஆண்டு கால நண்பர் கருணாகர ராஜாவின் சகோதரர் வைகுண்ட ராஜாவின் மகன் விபின் சக்கரவர்த்திக்கும் நான் பிரசாரம் செய்து வருகிறேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, இவ்விரு குடும்பத்திற்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர்களுக்கு பிரசாரம் செய்தவதற்கு வேறு தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement