அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால் விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை: அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு உறுதி

உளுந்துார்பேட்டை: 'அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால் விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும்' என உளுந்துார்பேட்டை அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேசினார்.

உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட அஜீஸ் நகர், பாலி, ஷேக்உஷேன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு கேட்டு அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சி காலத்தில்தான் உளுந்துார்பேட்டை தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது.

அ.தி.மு.க., ஆட்சியில் ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் பொறுப்பேற்றவுடன் வீடு இல்லா ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.மானிய விலையில் விவசாய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்வதோடு, விவசாய பொருட்கள் லாபகரமான விலை கிடைக்கும் வகையில் பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்' என்றார்.

அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்புராயன், முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம், த.மா.கா., மாவட்ட தலைவர் அதையூர் பாண்டியன், பா.ம.க., மாவட்ட தலைவர் சத்யா, முன்னாள் மாவட்ட தலைவர் ஜெகன், பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் அருள், புரட்சி பாரதம் கட்சி மாநில துணைச் செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement