கையில் ரூ.8 ஆயிரம் கூப்பன் கடை வாக்காளரின் விருப்பம்: தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் 'கலகல...'

பல்லடம்:''எட்டு ஆயிரம் ரூபாய் கூப்பனை வைத்துக் கொண்டு நீங்கள் எந்தக் கடைக்குச் செல்கிறீர்களோ, அது உங்கள் விருப்பம்'' என, பல்லடத்தில், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க., வேட்பாளர் செல்வராஜின் பேச்சு, வாக்காளர்களை கலகலப்புக்குள்ளாக்கியது.

பல்லடம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், தொகுதி முழுவதும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, தொகுதிக்கு உட்பட்ட, சித்தம்பலம், சின்னுார், வெங்கிட்டாபுரம், புளியம்பட்டி, அனுப்பட்டி, கே.அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டபடி தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

பொதுமக்களிடம் அவர் பேசியதாவது:

உங்களுக்கு என்னென்ன குறைகள் உள்ளதோ, கோரிக்கைகள் உள்ளதோ அனைத்தையும் தீர்த்து வைப்பது தான் இனி எனது வேலை. தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனதும், குடிநீர், தெருவிளக்கு, பஸ் வசதி உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன். உங்களிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு நிறைவேற்றாமல் செல்பவன் நானல்ல. ஏனெனில், பாமர மக்களை ஏமாற்றினால் பாவம் பிடித்து விடும்.

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக, 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பனை பயன்படுத்தி உங்கள் வீட்டுக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளலாம். எனவேதான், இதைத் தருகிறேன், அதைத்தருகிறேன் என்று முதல்வர் வாக்குறுதி தராமல், உங்களுடைய தேவைக்கேற்ப பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு கூப்பனை அறிவித்தார். நீங்கள் எந்தக் கடைக்கு போவீர்களோ அது உங்கள் விருப்பம்.

உங்களுக்கு தேவையான பொருட்களை கூப்பனை பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement