போதைப்பொருள் இல்லாத நகராக்குவோம் :தெற்கு தொகுதி அம்மன் அர்ஜூனன் வாக்குறுதி

கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், 80வது வார்டு கெம்பட்டி காலனி பகுதியில் நேற்று ஆதரவு திரட்டினார். கெம்பட்டி காலனி கருவலுார் மாரியம்மன் கோயில், பாரதி நகர், எஸ்.எம்.எஸ்., அபார்ட்மென்ட், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மாலையில், 82வது வார்டில் பிரசாரம் செய்தார். விநாயகர் கோயிலில் துவங்கி, ரத்தினம் வீதி, சூரியன் வீதி, இஸ்மாயில் வீதி, மணிமேகலை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆதரவு கோரினார். வீதி வீதியாக நடந்து சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை நோட்டீஸ் வினியோகித்தார். அ.தி.மு.க.வினருடன் பா.ஜ., அ.ம.மு.க. மற்றும் பா.ம.க. வினர் உடன் வந்தனர்.

அம்மன் அர்ஜூனன் கூறியதாவது:

தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மக்களால் சொந்தமாக வீடு கட்ட முடியவில்லை. மக்களின் அன்றாட குடும்பச் செலவு பன்மடங்கு அதிகரித்து விட்டது.

மாநகராட்சியில் வரைபட அனுமதி பெறுவதற்கு அலைய வேண்டியிருக்கிறது. தரமின்றி ரோடு போடப்பட்டுள்ளன. மழை பெய்தால் பெயர்ந்து வந்து விடுகின்றன. கமிஷன் வாங்கிக் கொண்டு தரமின்றி ரோடு போட்டிருக்கின்றனர். தி.மு.க. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தி.மு.க. ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாக அத்தியாவசிய பொருட்களின் விலை விஷம் போல் உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் இல்லாத நகராக கோவையை உருவாக்குவோம். பாலியல் தொல்லை இருக்காது. கொரோனா பரவிய காலத்தில் எந்தளவுக்கு உதவினோம் என்பதை மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் ரோடு, மழைநீர் வடிகால் கட்டிக் கொடுத்தோம். ஏழை மக்களுக்கு பட்டா பெற்று, வீடு கட்டிக் கொடுப்போம்.

ஜனநாயகத்துக்கும், பணநாயகத்துக்கும் இடையே தேர்தல். ஜனநாயகத்தை நம்பி போட்டியிடுகிறேன். தி.மு.க. வேட்பாளர் பணநாயகத்தை நம்பியிருக்கிறார்.

இவ்வாறு, அவர் கூறினார்.

உக்கடம் பகுதி கழகச் செயலாளர் ஜெய் கணேஷ், வார்டு செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

Advertisement