சென்னை பல்கலையில் ஜாதி பாகுபாடு; ஓய்வு நீதிபதிகள் குழு அமைத்து விசாரிக்க முடிவு

6

- நமது நிருபர் -

தேசிய பட்டியலின ஆணைய பரிந்துரைப்படி, சென்னை பல்கலை மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த, உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

நுாற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை பல்கலையில், பேராசிரியர்கள் பதவி உயர்வு உட்பட பல்வேறு கல்விசார் நடவடிக்கைகளில், உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என, குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

பல்கலையில், ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாகவும் புகார்கள் எழுகிறது. இதுதொடர்பாக, தேசிய பட்டியலின ஆணையத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பின், ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, கடந்த பிப்ரவரி 9ல், பல்கலை வளாகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

சென்னை பல்கலை பதிவாளர் ரீடா ஜான் தேர்வுக்குழுவில், யு.ஜி.சி., விதிகளின்படி, எஸ்.சி., - எஸ்.டி., பிரதிநிதிகள் இடம் பெறாதது குறித்து எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்தது. அதேபோல, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம், பி.எச்டி., மற்றும் பல்கலை ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தில், உரிய இடஒதுக்கீடு பின்பற்றாதது உட்பட பல்வேறு புகார்கள் குறித்து விசாரணை நடந்தது.

இந்நிலையில், சென்னை பல்க லையில், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான நான்கு புகார்கள் குறித்து, விரிவான விசாரணை நடத்த, தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய பட்டியலின ஆணைய பரிந்துரையின்படி, சென்னை பல்கலைமீது எழுந்துள்ள புகாரில், நான்கு புகார்கள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைத்து, விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த விசாரணை அறிக்கை, பட்டியலின ஆணையத்திடம் சமர்பிக்கப்படும். அதன்பின், தவறு செய்தவர்கள் மீது, துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement