அமெரிக்காவிடம் எல்.பி. ஜி. , இறக்குமதி அதிகரிக்க இந்தியா, சீனா முயற்சி

புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக அந்த பகுதியில் இருந்து எல்.பி.ஜி., வருவது பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு மாற்றாக அமெரிக்க எல்.பி.ஜி., இறக்குமதியை அதிகரிக்க இந்தியாவும் சீனாவும் முனைந்துள்ளன.

இது குறித்து சந்தை ஆய்வாளர்கள் கூறியதாவது:

சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்களுக்கு மூலப்பொருளாக பயன்படும் எல்.பி.ஜி., வினியோகத்தில் மேற்காசியா முக்கிய பங்காற்றி வந்தது.

ஆனால், மேற்காசிய மோதல் துவங்கிய பிறகு, அப்பகுதியில் இருந்து எல்.பி.ஜி., கொண்டு வரப்படுவது வெகுவாக குறைந்துள்ளது.

இதனால், ஆசிய நாடுகளை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களின் லாப விகிதம் குறைந்து, அவை உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆசிய நாடுகளில் குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு செலவும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், மேற்காசியாவில் இருந்து பெருமளவில் எல்.பி.ஜி., இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா ஆகியவை அமெரிக்கா, நார்வே, கனடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எரிவாயுவை அதிகளவில் இறக்குமதி செய்ய முயற்சி செய்து வருகின்றன.

ஆசிய நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய, அமெரிக்காவின் தினசரி எல்.பி.ஜி., ஏற்றுமதி ஏப்ரலில் 27 லட்சம் பேரல்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், மேற்காசிய எல்.பி.ஜி., பற்றாக்குறையை அமெரிக்காவால் முழுமையாக ஈடு செய்ய முடியாது.

மேலும், அமெரிக்காவில் இருந்து ஆசியாவிற்கு சரக்கு வர 30 நாட்களுக்கும் மேல் ஆகும். இந்த தாமதமும் சிக்கலை அதிகரிக்கிறது.

இவ்வாறு சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement