தமிழகத்தை பாதிக்கும்படி தொகுதி வரையறை நடந்தால் சும்மா இருக்க மாட்டோம்; முதல்வர் ஸ்டாலின்

132


சென்னை: தமிழகத்தை பாதிக்கும்படியோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை கூட்டும்படியோ தொகுதி வரையறை நடந்தால் சும்மா இருக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.


அவர் வீடியோவில் கூறியதாவது: தமிழத்தின் வாசல் வரை வந்து விட்ட பேராபத்து பற்றி சொல்லவும், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் தான் இந்த வீடியோ. தேர்தல் பிரசாரத்திற்காக நிற்காமல் ஓடி கொண்டு இருந்தாலும் இந்த கடமையை தவிர்க்க முடியாது. நாளை மறுநாள் ஏப்ரல் 16ல் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது.


கூடுகிறது என்று சொல்வதை விட, தமிழகம், மேற்கு வங்க தேர்தலுக்கு நடுவில் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத்திருத்தத்தை இந்த தொடரில் கொண்டு வர போகிறார்கள். முதலில் இருந்து நாம் இதுபற்றி தொடர்ந்து எச்சரித்தோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

கூட்டு நடவடிக்கை




தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுக்க இருந்து பாதிப்படைய கூடிய முதல்வர்களையும், முக்கிய கட்சி தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்தினோம். மக்கள்தொகையை கட்டுப்படுத்துங்கள், அளவாக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள், குடும்ப கட்டுப்பாட்டை பின்பற்றுமாறும் மத்திய அரசு சொன்னது எல்லாம் கேட்டோம். சொன்னதை ஒழுங்காக செய்ததுக்கு எங்களுக்கு தண்டனை தருவீர்களா?


தென் மாநிலங்கள் பாதிப்படையாது என்று பார்லிமென்டில் பிரதமர் உத்தரவாதம் தருமாறு கேட்டோம், பதில் இல்லை. இதுக்காக பல்வேறு கட்சி எம்பிக்கள் பிரதமரை சந்தித்து முறையிட நேரம் கேட்டோம், அதுவும் கிடைக்கவில்லை.

இப்படி, நாம் சொன்ன எதையும் காதில் வாங்காமல், திமுக மட்டுமல்ல எந்த கட்சியுடனும், எந்த மாநிலத்துடனும் எந்த ஆலோசனை நடத்தாமல் அவர்கள் இஷ்டத்திற்கு பண்ண பார்க்கிறார்கள்.

சும்மா இருக்க மாட்டோம்




அவசர, அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய விரும்புவது பாஜவின் அப்பட்டமான ஜனநாயக விரோத செயல். மாநில உரிமைகளை படுகொலை செய்து இருக்கிறார்கள். தொகுதிமறுவரையறை எப்படி நடக்கும் என்று இதுவரை எந்த விளக்கமும் இல்லை. இவர்கள் மறைத்து, மறைத்து செய்வதால் பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வலுவடைகிறது.


தென் மாநில மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். நடக்க இருக்கும் பார்லி சிறப்பு கூட்டத்தொடரில் எங்கள் எம்பிக்கள் கலந்து கொள்வார்கள்.தமிழகத்தை பாதிக்கும் படியோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை கூட்டும் படியோ தொகுதி வரையறை நடந்தால் சும்மா இருக்க மாட்டோம். தமிழகம் தன் எதிர்ப்பை கடுமையாக காட்டும். எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

இறுதி எச்சரிக்கை




நீங்கள் இதுவரை பார்க்காத தமிழகத்தை பார்க்க வேண்டியிருக்கும். 50,60களில் பார்த்த திமுகவை இந்தியா திரும்பவும் பார்க்க வேண்டியிருக்கும். மிரட்டுவதாக நினைக்காதீர்கள், நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் மிரட்டல் என்று நினைத்தாலும் கவலையில்லை. தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை. தேர்தல், ஆட்சி அதிகாரம் எங்களுக்கு இரண்டாம்பட்சம் தான்.


நாங்கள் சுயமரியாதைக்காரர்கள், கொள்கை தான் முக்கியம். மாநில உரிமைகள் தான் முக்கியம். தமிழகம் பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிடுவோம். பிரதமர் மோடிக்கு மீண்டும் சொல்கிறேன். தமிழகத்தில் இருந்து உங்களை நோக்கி விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை. தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Advertisement