மனைவிக்கு மிரட்டல் விடுத்த பெற்றோர் மீது புகார் செய்த மகன்

நெலமங்களா: காதல் திருமணம் செய்த என் மனைவியின் ஜாதி பெயரை சொல்லி திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன் பெற்றோர் மீது, மகன் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

பெங்களூரு நெலமங்களாவின் சுபாஷ் நகரை சேர்ந்தவர்கள் முனிசங்கரய்யா - ஆனந்தம்மா தம்பதி. இவர்களின் மகன் அபிஷேக். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தான் வேலை செய்யும் இடத்தில், தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த வித்யாஸ்ரீ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் எட்டு மாதங்களுக்கு முன், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, காரி காட்டேரம்மா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ஆனாலும், இருவரின் குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தம்பதி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக உள்ள வித்யாஸ்ரீயை, அபிஷேக்கின் பெற்றோர் ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அச்சமடைந்த அபிஷேக், நெலமங்களா டவுன் போலீசில், தன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, தன் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement